நடிகை சமந்தா குறித்து தமது சர்சைக்குரிய பேச்சை திரும்பப் பெறுவதாக தெலுங்கானா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் கொண்டா சுரேகா, நடிகை சமந்தாவின் திருமண முறிவிற்கு, முன்னாள் முதல்வர் கேசிஆர் மகன் கேடிஆர் தான் காரணம் என தெரிவித்திருந்தார்.
அவரது பேச்சுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் சுரேகா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமது வழக்கறிஞர் மூலம் கேடிஆர் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கொண்டா சுரேகா, தமது பேச்சு ஒரு குடும்பத்தை காயப்படுத்திவிட்டது எனவும், அதற்காக தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும், தமது பேச்சை நிபந்தனை இல்லாமல் திரும்பப் பெறுவதாக குறிப்பிட்டார்.