திருப்பதி லட்டு விவகாரத்தை விசாரிக்க புதிய விசாரணை குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கடந்த ஆட்சியில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.
விலங்குகள் கொழுப்பு தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில், நெய்யில் கலப்படம் செய்திருந்தது உறுதியானது. இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், நெய் கலப்பட விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும், சிபிஐ, ஆந்திர மாநில காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.