போதை பழக்கத்தால் தமிழகம் பாதிக்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், தனியார் அமைப்பு சார்பில் போதை ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆளுநர் ஆர்என் ரவி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி மற்றும் சோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, அனைவருக்கும் வணக்கம் என தமிழில் தனது பேச்சை தொடங்கினார். தீயவைகளை ஒழித்து வெற்றிக்காக கொண்டாடப்படும் நவராத்திரி விழா, ராஜ்பவனில் கொண்டாடப்படுகிறது என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் மத்திய அரசின் ஏஜென்ஸிகள் போதைப் பொருட்களை அதிக அளவு பறிமுதல் செய்து வரும் நிலையில், தமிழக போலீசார் போதிய அளவு அக்கறை காட்டவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர், போதைப் பொருட்கள் விவகாரத்தில் கல்வி நிறுவனங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், குழந்தைகளுடன் நேரம் செலவு செய்வதை பெற்றோர் அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனிடையே ஆளுநர் ரவி மற்றும் அவரது குடும்பத்தினர், சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி சங்கரநாராயணரை தரிசனம் செய்தனர்.
தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு அமைதி, வளம், நல்ல ஆரோக்கியம் மற்றும் தேசம் மேன்மேலும் முன்னேற்றம் அடைய, மனபூர்வமாக வேண்டிக் கொண்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.