கோவையில் நடைபெற்ற ஆனைமலை – நல்லாறு திட்ட கோரிக்கை மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூலூரை அடுத்த செஞ்சேரிபுத்தூர் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆனைமலை – நல்லாறு திட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சி நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மாநாட்டின் தீர்மானங்களை வாசித்தபோது குறுக்கிட்ட விவசாயி ஒருவர், மதுபோதையில் தீர்மான நகலைக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அவருக்கு தீர்மான நகல் வழங்க மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர்,
“ஆனைமலை – நல்லாறு திட்டத்திற்காக உண்மையாகவே போராடினீர்களா? சத்தியம் செய்யுங்கள்” எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அவரைப் பிடித்து அப்புறப்படுத்திய நிலையில், அங்கு வந்த மற்றொரு நபர் மதுபோதையில் இருந்த விவசாயியை கடுமையாக தாக்கினார். பின்னர் அவர்களை அங்கிருந்த போலீசார் அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்கப்பட்டவர் விவசாயியான சுரேஷ் என்பதும், அவரை தாக்கிய நபர் சுரேஷின் சகோதரர் என்பதும் தெரியவந்தது.