மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்தவர்களுக்கு முறையான ஆம்புலன்ஸ் வசதி கூட செய்துதரப்படவில்லை என உயிரிழந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நேற்று வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியைக் காண திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்றுள்ளார். அவர்கள் வாகனத்தை தீவுத்திடல் பகுதியில் நிறுத்தியிருந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்து இருசக்கர வாகனத்தை எடுத்து வர கார்த்திகேயன் தனியாக சென்றுள்ளார்.
வாகனத்தை எடுக்கச் சென்று 3 மணி நேரமாகியும் கணவர் திரும்பி வராததால், அவரது மனைவி சிவரஞ்சினி பதற்றமடைந்துள்ளார். அப்போது கணவரின் தொலைபேசியில் இருந்து தொடர்புகொண்ட ஒரு நபர், கார்த்திகேயன் வாந்தி எடுத்த நிலையில் மயங்கிக் கிடப்பதாகக் கூறி அவர் இருக்குமிடத்தை தெரிவித்துள்ளார்.
உடனடியாக அங்கு சென்ற சிவரஞ்சினி கணவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சிவரஞ்சினி, 3 மணி நேரமாக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவி கிடைக்காததே தனது கணவரின் உயிரிழப்புக்கு காரணம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.