வான்வழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல் ,லெபனான் மீது தரை வழி தாக்குதலையும் தொடங்கி உள்ளது. காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகள் கட்டமைத்து வைத்திருந்ததைப் போலவே, லெபனானில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஏகப்பட்ட சுரங்கங்களை கட்டமைத்துள்ளனர். ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் சுரங்கங்களை கட்ட வடகொரியா உதவி செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி, லெபனானுக்குள் படையெடுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம், ஹிஸ்புல்லாவின் ரகசிய சுரங்கப்பாதைகளைக் கண்டு பிடித்திருக்கிறது. தெற்கு லெபனானில் உள்ள Ayta ash Shab என்று சிறிய கிராமத்தில், 12 க்கும் மேற்பட்ட நிலத்தடி சுரங்கங்களை இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது.
சுமார் 80 அடி ஆழமான ஹிஸ்புல்லாவின் இந்த சுரங்கங்கள் பலநூறு கிலோமீட்டர் தூரம் கொண்டவையாகும். இந்த சுரங்கத்தில், ராணுவக் கட்டுப்பாட்டு அறைகள், ஆயுதங்கள், ராக்கெட் லாஞ்சர்கள், ஏவுகணைகளை வீசுவதற்குப் பயன்படுத்தப்படும் தளவாடங்கள் மற்றும் வெடிமருந்து சேமிப்புக் கிடங்குகள் ஆகியவை உள்ளன.
ஹமாஸ் கட்டியுள்ள சுரங்கப் பாதைகள், 186 மைல்கள் வரை நீளமும், 50 முதல் 200 அடி வரை ஆழமும் கொண்டவையாகும். சராசரியாக ஒவ்வொரு சுரங்கப்பாதையும் 6 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்டதாகும்.
2020 ஆம் ஆண்டிலேயே 230 அடி ஆழத்தில் உள்ள ஒரு சுரங்கப் பாதையை இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்தது. சராசரி ஒரு சுரங்கப்பாதை கட்டுவதற்கு 350 டிரக் கட்டுமான பொருட்கள் தேவை என்று கூறப் படுகிறது. இதனை கொண்டு 86 வீடுகள்,7 மசூதிகள்,6 பள்ளிகள்,19 மருத்துவமனைகள் கட்ட முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த சுரங்கப் பாதைகளில் மின்சாரம் மற்றும் காற்றோட்டம் வசதி உள்ளது. குளிர்சாதன பெட்டிகள் மற்றும் சமையலறையுடன் படுக்கை அறைகளும் உள்ளன. இவை அனைத்தும் நீண்ட காலத்துக்கு இந்த சுரங்கப் பாதைகளில், நிலத்தடியில் தங்குவதற்கு உதவுகின்றன.
ஹமாஸை விட ஹிஸ்புல்லா மிக நீளமான மற்றும் அதிக ஆழமான சுரங்கப் பாதைகளை கட்டியுள்ளனர். ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு, அவற்றில் பல இஸ்ரேல் நகரங்களுடன் தொடர்பு கொண்டதாக இருக்கின்றன.
லண்டனின் நிலத்தடி இரயில்வே பாதையை விட மிக நீளமான ஹிஸ்புல்லாவின் சுரங்கப் பாதைகள்,தென் கொரியாவுக்கு வட கொரியா போட்ட சுரங்கப் பாதையை நினைவூட்டுகின்றன. வட கொரிய இராணுவ அதிகாரிகள், ஹிஸ்புல்லா தலைவர்களைச் சந்தித்ததாக இஸ்ரேலின் Reichman பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Dr Daphne Richemond-Barak தெரிவித்திருக்கிறார்.
நிலத்தடியில் ஆழமான சுரங்கங்களைக் கட்டும் கலையை ஈரானிடம் இருந்தே ஹிஸ்புல்லா கற்றுக் கொண்டதாக தெரிகிறது. அணு சக்தி நிலையங்களை இரகசிய சுரங்கங்களில் ஈரான் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. I
SIS தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி ஒரு சுரங்கப்பாதையில் சுட்டுக் கொல்லப்பட்டார்; சதாம் உசேன் சுரங்கம் ஒன்றிலிருந்து சிறை பிடிக்கப் பட்டார். அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பலமுறை சுரங்கப்பாதைகளைப் பயன்படுத்தி அமெரிக்காவின் பிடியிலிருந்து தப்பி இருக்கிறார்.
காசாவில் ஹமாஸ் உருவாக்கி வைத்துள்ள நிலத்தடி சுரங்கப் பாதைகளை அழித்து வரும் இஸ்ரேல் , லெபனானிலும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் சுரங்கப் பாதைகளை அழிக்கத் தொடங்கி உள்ளது.
கடந்த மாதம் ,லெபனான் தலைநகர்,பெய்ரூட்டில் 65 அடி ஆழத்தில் உள்ள சுரங்கப் பாதையின் பதுங்கு அறையில் இருந்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா இஸ்ரேல் வான் வழி தாக்குதலில் கொல்லப்பட்டார். இதன் மூலம், எத்தனை ஆழத்தில், ஒளிந்து கொண்டாலும், விடப் போவதில்லை என்று ஹிஸ்புல்லா மற்றும் ஈரானுக்கு உரக்க சொல்லி இருக்கிறது.