தெலங்கானாவில் மனைவி வாங்கிய லஞ்ச பணத்தை கணவனே வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மணிக்கொண்டா நகராட்சி அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் திவ்யஜோதி. பல்வேறு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்த திவ்யஜோதி, தான் பெற்ற சுமார் 80 லட்சம் ரூபாய் அளவிலான லஞ்சப் பணத்தை வீட்டில் ஆங்காங்கே பதுக்கி வைத்துள்ளார்.
இதைக்கண்ட அவரது கணவர் ஸ்ரீபாதா லஞ்சம் வாங்குவது தவறு என எடுத்துரைத்து மனைவிக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆனால் கணவரின் பேச்சை பொருட்படுத்தாத திவ்யஜோதி, தொடர்ந்து லஞ்சம் வாங்கிவந்ததாகவும் கூறப்படுகிறது.
கண்டித்தும் கேட்காத மனைவிக்கு பாடம் புகட்ட எண்ணிய கணவர், வீட்டில் மனைவி பதுக்கி வைத்திருந்த லஞ்சப் பணத்தை வீடியோ எடுத்து, ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், திவ்யஜோதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.