தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
சேலத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் இடுப்பளவு மழைநீர் தேங்கியது. இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
அதேபோல் சேலத்தில் பெய்த கனமழை காரணமாக சேலதாம்பட்டி ஏரி நிரம்பி உடைந்தது. இதனால் ஏரியை சுற்றியுள்ள ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளில் நீர் புகுந்தது. இளம்பிள்ளை பகுதியில் வசிக்கும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில், வானூர், இடையஞ்சாவடி, பொம்மையார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. ஆரோவில்லின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கடற்கரை சாலை, முத்தியால்பேட்டை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும், மழை காரணமாக ஆயுதபூஜையை முன்னிட்டு சாலையோரம் கடைகள் அமைத்த வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.