தொழில்நுட்பக் கோளாறால் திருச்சியில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகள், மாற்று விமானம் மூலம் சார்ஜாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
திருச்சியில் இருந்து 6 குழந்தைகள் உள்ளிட்ட 144 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நேற்று மாலை 5.40 மணியளவில் சார்ஜாவுக்கு புறப்பட்டது. வானில் பறந்துகொண்டிருந்த போது, விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால், தொடர்ந்து விமானத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து எரிபொருள் தீர்ந்த பிறகு விமானத்தை தரை இறக்க விமானிக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் வானில் வட்டமடித்தது.
பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ்கள், தீயணைப்புத் துறை வீரர்கள், மருத்துவக் குழுவினர், திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர். போதுமான அளவு எரிபொருள் குறைந்ததும், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கைத்தட்டி விமானத்தை வரவேற்றனர்.
தரையிறங்கிய விமானத்தில் இருந்த 6 குழந்தைகள் உள்ளிட்ட 144 பயணிகளுக்கும் முதலுதவி சிகிச்சை, உணவு, குடிநீர் உள்ளிட்டவை அளிக்கப்பட்டன. அப்போது பேசிய பயணிகள், விமானம் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருந்ததால் அச்சம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். பயணிகளை பதற்றமடைய விடாத விமானி சாதுர்யமாக தரையிறங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்னதாகவே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தெரிவித்ததாகவும் கூறினர்.