துபாயில் கைது செய்யப்பட்ட மகாதேவ் கிரிக்கெட் சூதாட்ட செயலியின் உரிமையாளரை இந்தியாவுக்கு கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை மத்திய புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. அதுபற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல… கோடிக்கணக்கான ரூபாய் புழங்கும் பெரும் வணிகம்.
சாதி, மதம், மொழி கடந்து கோடிக்கணக்கான இந்தியர்களால் நேசிக்கப்படுவதால் கிரிக்கெட் எப்போதும் தங்க முட்டையிடும் வாத்துதான். சட்டப்படியோ அல்லது சட்டவிரோதமாகவோ பல தொழில்கள் கிரிக்கெட்டைச் சுற்றி நடந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றே மகாதேவ் சூதாட்ட செயலி.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள BHILAI என்ற இடத்தில் சௌரப் சந்த்ராகர் என்பவர் JUICE கடை நடத்தி வந்தார். இன்னும் சில ஆண்டுகளில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் உனக்கு திருமணம் நடக்கும் என்று யாராவது அவரிடம் கூறியிருந்தால் அந்த நபருக்கு மனநிலை சரியில்லை என்று நினைத்திருப்பார் சௌரப். ஆனால் உண்மையிலேயே அப்படி நடந்தது. அல்லது சௌரப் நடத்திக் கொண்டார். அது எப்படி சாத்தியமானது???
JUICE கடை உரிமையாளரான சௌரப்பை மகாராஜா ஆக்கியது மகாதேவ் சூதாட்ட செயலி. ரவி உப்பல் என்பவருடன் இணைந்து துபாயில் இருந்து மகாதேவ் செயலியை இயக்கினார் சௌரப். இதற்காக இருவரும் 2019-ஆம் ஆண்டு துபாய் சென்றுள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் மகாதேவ் செயலியை இயக்கியுள்ளனர்.
CRICKET BETTING மூலம் கிட்டத்தட்ட 6 ஆயிரம் கோடி ரூபாயை இருவரும் முறைகேடாக ஈட்டியுள்ளனர் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலேசியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இடங்களில் CALL CENTRE-களை அமைத்து மகாதேவ் செயலியை விரிவுபடுத்தியிருக்கிறார்கள் இருவரும்.
2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் சௌரப். பாலிவுட்டைச் சேர்ந்த 17 பிரபலங்கள் அவரது திருமணத்தில் கலை நிகழ்ச்சி நடத்தினார்களாம். அதற்காக தனி விமானத்தில் பிரபலங்களை துபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. மகாதேவ் செயலி மூலம் தமக்கு கிடைத்த ஒருநாள் வருமானத்தை திருமணத்துக்காக சௌரப் செலவு செய்துள்ளார்.
அவருடைய ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? 200 கோடி ரூபாய். இந்த பிரமாண்ட திருமணத்துக்குப் பிறகே மகாதேவ் செயலி குறித்தும் சௌரப் சந்த்ராகர் குறித்தும் அதிகம் பேசப்பட்டது.
தமது திருமணம் மற்றும் மகாதேவ் செயலியின் வெற்றி விழாவில் கலந்து கொண்டதற்காக ஹவாலா முறையில் பாலிவுட் பிரபலங்களுக்கு சௌரப் பணம் வழங்கியதாக புகார் எழுந்தது. உடனடியாக அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் களத்தில் இறங்க, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக சத்தீஸ்கர் மாநில அரசியலையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய விவகாரங்கள் எல்லாம் வெளிவந்தன.
ஆம். சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகலுக்கு சௌரப் சந்த்ராகர் 508 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. தம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அரசு அதிகாரிகள், காவல்துறையினர், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பொட்டிபொட்டியாக கோடிக்கணக்கில் அள்ளிக்கொடுத்தார் சௌரப் என்கின்றன விசாரணை அமைப்புகள்.
ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டார் சௌரப். அவரையும் ரவி உப்பலையும் துபாய் காவல்துறை வீட்டுக்காவலில் வைத்திருக்கிறது. இந்நிலையில் இருவரையும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இருநாட்டு உயரதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சௌரப் சந்த்ராகர் இந்தியா கொண்டு வரப்பட்டால் மேலும் பல பூதங்கள் கிளம்பி புயலைக் கிளப்பலாம்.