தமிழகத்தில் பள்ளிகளின் வேலை நாட்களை 210 தினங்களாக குறைத்து நடப்பு கல்வியாண்டின் திருத்தப்பட்ட நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளின் வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய நாட்காட்டியை ஆண்டுதோறும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு வருகிறது.
அதன்படி நடப்பு கல்வியாண்டில் 220 தினங்கள் பள்ளி வேலை நாட்களாகவும், 19 சனிக் கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
கடந்த ஜூன் 8-ம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த நாட்காட்டிக்கு ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்புகளும், வேலை நாட்களை குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன.
அதன்படி திருத்தப்பட்ட நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதில் 19 சனிக் கிழமைகளில் வேலைநாட்கள் என்பதை மாற்றி 4 சனிக் கிழமைகளில் மட்டுமே வகுப்புகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலை நாட்கள் 210 நாட்களுக்கு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
பொதுத்தேர்வு அட்டவணையை பொறுத்தவரை 10, 11, 12ஆம் வகுப்புக்களுக்கான தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் எனவும் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஸ் வரும் 14-ம் தேதி வெளியிடுவார் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.