தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பாபா சித்திக் யார்? அவரது பின்னணி என்ன? என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
17 வயதில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கிய பாபா சித்திக், 1992-1997-ம் ஆண்டில் மும்பை சிவில் அமைப்பின் கவுன்சிலராக தேர்வானார். 1999-ல் அவர் பாந்த்ரா மேற்கு தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்தடுத்து 2004 மற்றும் 2009 சட்டமன்ற தேர்தல்களிலும் பாபா சித்திக் பாந்த்ரா மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மகாராஷ்டிராவில் விலாஸ்ராவ் தேஷ்முக் அரசில், பாபா சித்திக் 2004 முதல் 2008 வரை உணவு வழங்கல்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாந்த்ரா கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட பாபா சித்திக் பாஜக-விடம் தோல்வியை தழுவினார்.காங்கிரஸ் கட்சியுடனான 48 ஆண்டுகால பயணத்தை முடித்துக்கொண்ட பாபா சித்திக், கடந்த பிப்ரவரியில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பாலிவுட்டின் முக்கிய பிரபலங்களான சல்மான் கான் போன்றோருடன் பாபா சித்திக் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.2013-ம் ஆண்டு சல்மான் கான், ஷாருக்கான் இடையே இருந்த மனஸ்தாபத்திற்கு, தாம் ஏற்பாடு செய்த இப்தார் விருந்தில் பாபா சித்திக் தீர்வு கண்டதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் பாபா சித்திக் அரசியலில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் மிகுந்த செல்வாக்கு கொண்டவராக பார்க்கப்பட்டார்.