கனவு காணுங்கள் – கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும் – சிந்தனைகள் செயல்களாகும் என்று இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்த ஏவுகணை நாயகனான டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் நினைவைப் போற்றும் விதமாக ஒரு செய்தி தொகுப்பு.
தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் 1931ம் ஆண்டு அக்டோபர் 15ம் நாள், ஜைனுலாபுதீன் – ஆஷியம்மா தம்பதியினரின் 5வது மகனாக அப்துல் கலாம் பிறந்தார். ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் என்பதன் சுருக்கமே ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.
மீனவர் குடும்பத்தில் பிறந்து, சிறுவயதில் வறுமையின் பின்னணியிலேயே வளர்ந்த அப்துல் கலாம், மாணவனாக இருக்கும்போதே குடும்ப வருமானத்துக்காக தினமும் செய்தித்தாள் விநியோகிக்கும் பணியைச் செய்தார்.
ராமேஸ்வரத்தில் பள்ளிப் படிப்பை முடித்த அப்துல் கலாம், திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். பிறகு, சென்னையில் உள்ள எம்.ஐ.டி.யில் 1955ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்து முதுகலை பட்டம் பெற்றார்.
விமானியாக வேண்டும் என்ற ஆசையிருந்தும், அந்த துறையில் இடம் கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தாக அப்துல் கலாம் தெரிவித்திருந்தார்.
1960ஆம் ஆண்டு, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பட்டம் பெற்ற பிறகு, அவர் ஒரு ஏரோநாட்டிக் டெவலப்மென்ட் நிறுவனத்தில் சேர்ந்து ஒரு சிறிய ஹோவர் விமானத்தை வடிவமைத்தார்.
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் விக்ரம் சாராபாயின் கீழ் INCOSPAR கமிட்டியில் பணியாற்றிய டாக்டர் அப்துல் கலாம், 1969 ஆம் ஆண்டு, இஸ்ரோவுக்கு பணி மாறுதல் பெற்றார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவுகணை வாகனமான SLV-III டாக்டர் அப்துல் கலாமின் மேற்பார்வையில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது.
1970-களில், பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்க ப்ராஜெக்ட் டெவில் மற்றும் ப்ராஜெக்ட் வேலியண்ட் ஆகியவற்றின் இயக்குனராக டாக்டர் அப்துல் கலாம் பணிபுரிந்தார். ஜூலை 1992ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு டிசம்பர் வரை இந்திய பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆர் & டி அமைப்பின் செயலாளராகவும் டாக்டர் அப்துல் கலாம் இருந்தார்.
ஜூன் 2002ம் ஆண்டு, இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குடியரசு தலைவரான பிறகும், பல்வேறு பல்கலைக்கழங்களில் தொழில்நுட்ப விரிவுரையாளராக கல்விப் பணியாற்றி வந்தார்.
ஒரு விஞ்ஞானியாகவும், அறிவியல் அறிஞராகவும், பேராசிரியராகவும், மற்றும் குடியரசுத் தலைவராகவும் டாக்டர் அப்துல் கலாம், இந்தியாவுக்கு செய்த பணிகள் அளப்பரியதாகும். நாட்டை முன்னேற்றும் திட்டங்களைச் செயல்படுத்தியதில் டாக்டர் அப்துல் கலாமின் பங்கு மிகப் பெரியதாகும். 1998ம் ஆண்டு போக்ரான்- II அணுசக்தி சோதனைகளில் முக்கிய பங்கு வகித்ததன் மூலம் ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்ற இந்திய மக்களால் போற்றப்படுகிறார்.
விங்ஸ் ஆஃப் ஃபயர்’, ‘மை ஜர்னி’ ‘பற்றவைக்கப்பட்ட மனங்கள்’ மற்றும் ‘இந்தியா 2020′ ஆகிய நூல்கள் மூலம் இளைய தலைமுறைகளுக்குச் சிறந்த வழிகாட்டுதல்களையும், உத்வேகத்தையும் அப்துல் கலாம் ஏற்படுத்தி இருந்தார்.
1981ம் ஆண்டில் பத்ம பூஷன் விருது, 1990ம் ஆண்டில் பத்ம விபூஷண் விருது, 1997ம் ஆண்டில் பாரத ரத்னா விருது, 1998ம் ஆண்டு வீர் சாவர்க்கர் விருது என பல விருதுகள் டாக்டர் அப்துல் கலாமுக்கு வழங்கப்பட்டன. பிரிட்டனின் மிக உயரிய விருதான “கிங் சார்லஸ் II பதக்கமும் டாக்டர் அப்துல் கலாமுக்கு வழங்கப்பட்டது. மேலும், அமெரிக்காவின் “ஹூவர் மெடல்” விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
மாணவர்கள், இளைஞர்கள் இடையே கல்வி அறிவை வளர்ப்பதிலும், தன்னம்பிக்கையை விதைப்பதிலும் தன் வாழ்நாள் முழுவதையும் டாக்டர் அப்துல் கலாம் செலவழித்தார். கடந்த 2017ம் ஆண்டு, மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோதே டாக்டர் அப்துல் கலாம் காலமானார்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அப்துல் கலாம் பெரும் உந்துகோளாக விளங்கிய டாக்டர். அப்துல் கலாம் பிறந்த அக்டோபர் 15ம் தேதியை 2010ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, உலக மாணவர் தினமாக அறிவித்தது. தமிழகத்தில், டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
பணிவு, உண்மை, வெற்றிக்கான அர்ப்பணிப்பு ஆகிய நற்குணங்களால் உயர்ந்து நின்ற டாக்டர் அப்துல் கலாம், ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உந்து சக்தி என்றால் மிகையில்லை.