கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கோவிட் தடுப்பூசிகளால் எந்தவித பயன்களும் இல்லை என்றும், அது பக்கவிளைவுகளை தான் ஏற்படுத்துகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு ஒரு நடவடிக்கையுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்ற மனுக்களை எதன் அடிப்படையில் தாக்கல் செய்கிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கோவிட் தடுப்பூசி மட்டும் இல்லாவிட்டால் கொரோனா நமக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும் என்பதை மனுதாரர் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், முகாந்திரம் இல்லாத மனுவை விசாரிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர்.
மேலும், மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.