கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கனமழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
கரூரின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்ததால் கள்ளப்பள்ளி, கிருஷ்ணராயபுரம் ஆகிய இடங்களில் உள்ள விவசாய நிலங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதில் 100 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் நாற்றுகள், வாழைக்கன்றுகள் உள்ளிட்டவை தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் மீண்டும் நெல் நாற்றுகள் நட இருப்பதாகவும், அதற்கு மீண்டும் அதிக செலவாகும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இப்பகுதிகளில் முறையாக வடிகால்கள் தூர்வாரவில்லை எனவும் அதனால் தான் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் விவசாயிகள் வேதனையடைந்தனர். எனவே வடிகால்களை தூர்வார அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.