சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிகக் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
எழும்பூர், வேப்பேரி, நுங்கம்பாக்கம், கிண்டி, ஆலந்தூர், நங்கநல்லூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், திருவான்மியூர், அடையாறு, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இன்று காலையிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.