‘AIR PURIFIER’ எனப்படும் காற்று சுத்திகரிப்பான் தயாரிப்புகள் குறித்த விளம்பரங்கள் மற்றும் வாக்குறுதிகளின் உண்மைத்தன்மை குறித்து கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உலக தரநிர்ணய நாளை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘AIR PURIFIER’ தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகள் குறித்து தவறான வாக்குறுதிகளை வெளியிடுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், பி.ஐ.எஸ் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை இதுகுறித்த தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள நுகர்வோர் விவகாரத்துறை செயலர் நிதி காரே, காற்று சுத்திகரிப்பான் கருவிகள் குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களை அரசு கண்காணிக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்திய தரச்சான்று அமைப்பான பி.ஐ.எஸ் இதனை கருத்தில்கொண்டு, தயாரிப்பாளர்கள் தெரிவிக்கும் தகவல்கள், கருவியின் தரத்துடன் பொருந்திப் போகிறதா எனவும், உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளதா எனவும் பரிசோதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரக்கட்டுப்பாட்டு பரிசோதனைகளுடன் ஒத்துப்போகாத தயாரிப்புகளின் விற்பனையை தடை செய்வது குறித்து தரச்சான்று அமைப்பின் பரிந்துரையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.