முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிக்காக கட்டுமான பொருட்களை எடுத்துச்செல்ல கேரள அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகக்கூறி, துணை காண்காணிப்பு குழு ஆய்வை தமிழக அரசு அதிகாரிகள் புறக்கணித்தனர்.
முல்லைப் பெரியாறு அணையில் பருவ காலங்களின்போது ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க கடந்த 2014ஆம் ஆண்டு மூவர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.
இந்த குழுவுக்கு உதவியாக அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட துணைக் கண்காணிப்பு குழு அணையில் அவ்வபோது ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து வருகின்றது.
இந்நிலையில், அணையில் ஆய்வு மேற்கொள்ள மத்திய நீர்வள துணைக் கண்காணிப்புக் குழு தலைவர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் சென்றனர்.
அப்போது அணையின் பராமரிப்பு பணிக்காக கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல கேரள அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகக்கூறி, துணை காண்காணிப்பு குழு ஆய்வை, தமிழக அரசு அதிகாரிகள் புறக்கணித்தனர்.
இதனிடையே துணை கண்காணிப்பு குழுவின் ஆய்வினை புறக்கணித்து லோயர் கேம்ப் பகுதிக்கு வந்த தமிழக அரசு அதிகாரிகளை வரவேற்ற விவசாயிகள் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.