ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என தெரிவித்தது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில், சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ரவுடிகளை என்கவுன்டர் செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக மாநகர காவல் ஆணையர் அருணுக்கு எதிராக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தது.
ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறியது குறித்து நேரில் விளக்கமளிக்கும்படி, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மாநகர காவல் ஆணையர் அருண் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி விளக்க மனுவை தாக்கல் செய்தார்.
அதில், எவரையும் மிரட்டும் வகையில் காவல் ஆணையர் அருண் கருத்து தெரிவிக்கவில்லை என்றும், அவரது பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவுமே காவல் ஆணையர் அவ்வாறு பேசியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட மனித உரிமை ஆணையம், வழக்கில் இருந்து காவல் ஆணையரின் பெயரை நீக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.