நெல்லையில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை சித்ரவதை செய்யும் காட்சிகள் தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் வெளியான நிலையில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
நெல்லையில் ஜல் நீட் அகாடமி என்ற பெயரில் நீட் பயிற்சி மையத்தை கடந்த 2 ஆண்டுகளாக கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு கடந்த ஆண்டு பயின்ற 12 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இதற்காக, அவர்களிடம் சராசரியாக 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பயிற்சி மையத்தில் மாணவர்கள் சிலர் தூங்கியதால், அவர்களை வரவழைத்த அகாடமியின் உரிமையாளர் ஜலாலுதீன் அஹமத் பிரம்பால் அடித்து, ரத்தம் சொட்ட சொட்ட சித்ரவதை செய்துள்ளார்.
மேலும், காலணிகளை சரியாக அடுக்கி வைக்கவில்லை என கூறி, மாணவிகள் சிலர் மீது காலணிகளை வீசி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் வெளியானது.
இந்நிலையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் சிசிடிவி காட்சிகள் வெளியான 30 நிமிடங்களில், நெல்லையில் அமைந்துள்ள ஜல் நீட் அகாமியில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது, மாணவர்களின் கல்வி கட்டணம், அவர்களுக்கு இழைக்கப்பட்ட சித்ரவதை உள்ளிட்டவை குறித்து விரிவாக விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, போலீசாரும் அந்த மையத்திற்கு நேரில் சென்று விசாரணையை துவங்கியுள்ளனர்.