தமிழையோ, தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை என டிடி தமிழ் தொலைக்காட்சி விளக்கம் அளித்துள்ளது.
டிடி தமிழ்’ சார்பில் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்தி மாதம் நிறைவு நாள் விழா சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அந்தத் தொலைக்காட்சி நிலையத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்று பேசினார். அப்போது” இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க கடந்த 50 ஆண்டுகளில் பலமுறை முயற்சி நடந்ததாகவும், அந்த முயற்சி ஒருபோதும் நிறைவேறாது என்று உறுதிப்படத் தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியின்போது தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. அப்போது அந்த பாடலில் ” தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற வரி தவறுதலாக விடப்பட்டது.
இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள டிடி தமிழ்,
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சென்னை தூர்தர்ஷன் இன்று நடத்திய இந்தி மாத நிறைவு விழா மற்றும் பொன் விழாவின் ஒருபகுதியாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தமிழ் தாய் வாழ்த்து பாடலின் போது கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டு விட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழையோ, தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை, வேண்டும் என்று இதனை யாரும் செய்யவில்லை. இது தொடர்பாக, தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.