ஹமாஸ் படையின் தலைவரான யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் கொன்றது அந்நாட்டின் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய கொடூர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட யாஹ்யா சின்வாரின் பின்னணி, அவர் கொல்லப்பட்டது எப்படி? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழனன்று ஒரு வீடியோ வெளியிட்டு, ரஃபாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார். சின்வாரின் இறுதித் தருணங்களின் ட்ரோன் காட்சிகளையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது.
ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டது போருக்கான முடிவல்ல என்று பொருள்படும்படி அந்த வீடியோவில் பேசிய நெதன்யாகு, போர் நிறுத்தத்திற்கான எந்தவொரு உறுதியையும் அளிக்கவில்லை. மாறாக பிணைக் கைதிகள் அனைவரும் திருப்பி அனுப்பப்படும் வரை இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை தொடரும் என்றே அவர் கூறியிருந்தார்.
ஹமாஸின் தீய ஆட்சியின் வீழ்ச்சிக்கு சின்வார் மரணம் ஒரு முக்கிய அடையாளமென்றும் நெதன்யாகு சுட்டிக்காட்டினார். சின்வார் கொல்லப்பட்டது இஸ்ரேலுக்கு பெரிய வெற்றியாக பார்க்கப்படுவதன் மூலம், அவரைப் பற்றிய பின்னணியை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எழுகிறது.
காசாவின் கான் யூனிஸில் உள்ள அகதிகள் முகாமில் கடந்த 1962இல் பிறந்த சின்வார், 1987இல் ஹமாஸில் இணைந்தார். அப்போது இஸ்ரேலிய வீரர்களை கொன்ற குற்றச்சாட்டில் அந்நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டார்.
பல ஆண்டுகளை இஸ்ரேலிய சிறையில் கழித்ததன் மூலம் அந்நாட்டின் அரசியலை அறிந்தார். 2011இல் விடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு ஹமாஸின் ராணுவ பலத்தை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தினார். உலகளாவிய பயங்கரவாதி என்று அமெரிக்காவால் முத்திரை குத்தப்பட்ட சின்வார், ஹமாஸின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியேவுடன் சேர்ந்து, ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா உட்பட அதன் நட்பு நாடுகளுடன் நட்புறுவை மறுசீரமைக்க பணியாற்றினார்.
ஹமாஸின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானுக்குச் சென்றிருந்தபோது இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ஹமாஸின் உயர்மட்டத் தலைவராக சின்வார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இஸ்ரேலில் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய கொடூர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்தான் இந்த யாஹ்யா சின்வார். கடந்த அக்டோபரில் இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஆயிரத்து 200 பேரை ஹமாஸ் கொன்று குவித்ததன் மூலம், யூத தேசத்தின் ஹிட் லிஸ்டில் பட்டியலிடப்பட்டார் சின்வார்.
அந்த தாக்குதலைத் தொடர்ந்து தலைமறைவான அவர், ஹமாஸின் சுரங்கப்பாதை ஒன்றில் நடந்து சென்ற புகைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. அதைத் தொடர்ந்து வீடியோக்களும் வெளியாகின.
இதன் மூலம் இஸ்ரேலின் புலனாய்வு அமைப்புகளும், அந்நாட்டு பாதுகாப்பு படையும் சின்வாரை தேடும் வேட்டையை முடுக்கி விட்டன. கடந்த டிசம்பரில் சின்வாரின் காசா இல்லத்தை இஸ்ரேல் படைகள் சுற்றி வளைத்ததாக நெதன்யாகு அறிவித்திருந்தார். என்றாலும் அவர் பிடிபடவில்லை.
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் பூமிக்கு அடியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் நீண்ட நாட்களாக அவர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அங்கு, மெய்க் காப்பாளர்கள் மற்றும் பணய கைதிகளை மனித கேடயங்களாக பயன்படுத்தி அவர் தங்கியிருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த புதனன்று ரஃபா நகரின் டெல் சுல்தான் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் உருவம் தென்பட்டதை இஸ்ரேல் படைப்பிரிவு கவனித்தது. அதைத்தொடர்ந்து படைப்பிரிவின் தளபதியின் உத்தரவின்பேரில் அந்த கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஹமாஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்த மூவர் ட்ரோன் மூலம் அடையாளம் காணப்பட்டு, தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்போது 3 பேரில் 2 பேர் ஒரு கட்டடத்திற்குள்ளும், மற்றொருவர் வேறொரு கட்டடத்திற்குள்ளும் பிரிந்து சென்றனர். அந்த கட்டடத்திற்குள் ட்ரோனை செலுத்தி ஆள் நடமாட்டத்தை உறுதி செய்த இஸ்ரேல் ராணுவம் அந்த நபர் உட்பட 3 பேரை சுட்டுக் கொன்றது. அங்கிருந்த சடலம் ஹமாஸ் தலைவரின் தோற்றத்தை ஒத்திருந்தது பரிசோதனையில் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அந்த சடலம் இஸ்ரேலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. டிஎன்ஏ பரிசோதனையில், கொல்லப்பட்டது சின்வார்தான் என்பதை இஸ்ரேல் உறுதிப்படுத்தியது. ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரைத்தான் சுட்டுக் கொன்றோம் என்பது தங்களுக்கு முதலில் தெரியாது என்று தாக்குதல் நடத்திய இஸ்ரேல் படைப்பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
இஸ்ரேல் ராணுவத்தால் வெளியிடப்பட்ட ட்ரோன் காட்சியில் சின்வார் கொல்லப்படுவதற்கு முன் நிகழ்ந்த கடைசி தருணங்கள் இடம் பெற்றிருந்தன. அதில் போரால் சிதிலமடைந்த கட்டடத்தில் நாற்காலியில் சின்வார் அமர்ந்திருந்தது பதிவாகி இருந்தது.
சின்வாரின் மரணத்தின் மூலம் ஹமாஸ் உடனான போரில் இஸ்ரேல் தனது முக்கிய இலக்கை அடைந்தது என்றே கூறலாம். ஆனால் அத்துடன் போர் முடிவுக்கு வரப் போவதில்லை என்றே தெரிகிறது. சின்வார் கொல்லப்பட்டதன் மூலம் இஸ்ரேல் உடனான மோதல் மேலும் அதிகரிக்கும் என்று ஈரான் ஆதரவு போராளிக் குழுவான ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. எனவே, அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.