ஒரே நாளில் 20 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
டெல்லியில் இருந்து மும்பை வழியாக இஸ்தான்புல் செல்லும் இண்டிகோ விமானத்துக்கும், ஜோத்பூரிலிருந்து டெல்லிக்குச் செல்லும் மற்றொரு இண்டிகோ விமானத்துக்கும், உதய்பூரில் இருந்து மும்பைக்குச் செல்லும் விஸ்தாரா விமானத்துக்கும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த தலா ஆறு விமானங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
கடந்த சில தினங்களாகவே இந்தியாவில் உள்நாட்டிலும் சர்வதேச வழித்தடத்திலும் இயக்கப்படும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், சோதனையில் அவை வதந்தி என்பதும் கண்டறியப்பட்டது. இந்த வாரத்தில் மட்டும் 90 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.