தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அரங்கேறிவரும் ரூட்டு தல விவகாரம் மாணவர் ஒருவரை சக மாணவர்களே அடித்து கொலை செய்யும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் ரூட்டு தல குறித்தும், அதிலிருந்து விடுபட வேண்டிய கட்டாயம் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அண்மையில் இரண்டு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மகனை இழந்த பெற்றோர்கள் ஆறுதல் சொல்ல ஆளின்றி தவித்து வருகின்றனர். இத்தனைக்கும் பின்னால் இருப்பது ரூட்டு தல எனப்படும் அந்த அநாகரீகமான கலாச்சாரம் தான்….
பள்ளிக்கல்வியை முடிக்கும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக திகழ்வது கல்லூரிக் காலம். அந்த கல்லூரிக் காலத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றப்பாதையில் பயணிப்போரின் எண்ணிக்கை ஏராளமாக இருந்தாலும், சிலர் தவறான பாதையில் சென்று தங்களின் எதிர்காலத்தை இழக்கக் கூடிய சூழலும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது தான் இந்த ரூட்டு தல எனும் பேரழிவு…
பேருந்துகள் மற்றும் ரயில்களில் தொடர்ந்து ஒரே மார்க்கத்திலிருந்து வரும் மாணவர்களில் ஒருவர், மற்ற மாணவர்களுக்கு தலைவனாக செயல்படுவதே ரூட்டு தல என அழைக்கப்படுகிறது. தனக்கு கீழ் ஒரு குழுவை உருவாக்கி பேருந்துகள் மற்றும் ரயில்கள் பயணிக்க கூடிய வழித்தடத்திற்கு நான் தான் ராஜா என்பது போல தோற்றத்தையும் ரூட்டு தலைகள் உருவாக்கி வைத்திருக்கின்றனர்.
ரூட்டு தலைகளில் இரண்டு ரகம் உண்டு. எந்தவிதமான வன்முறைகளிலும் ஈடுபடாமல் தனக்கு கீழ் ஒரு குழு இருக்கிறது என பெருமையை மட்டுமே விரும்பும் ரூட்டு தலைகள் முதல் ரகம். புதுவிதமான உடைகளை உடுத்துவது, குரலை உயர்த்தி பேசுவது, மற்ற மாணவர்களை கேலி கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் அதே முதல் ரகம் தான்.
பேருந்து அல்லது ரயிலில் வரும் மொத்த மாணவர்களையும் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருப்பது இரண்டாவது ரகம். வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, வெளி ஆட்களை அழைத்து வந்து தனக்கு மாஸ் இருப்பதாக காட்டிக் கொள்வது, எப்போதும் ஆயுதங்களை வைத்திருப்பது என மிகவும் ஆபத்தானது அந்த இரண்டாவது ரகம்.
ரூட்டு தலைக்கென பிரத்யேக காணாப் பாடல்களும் உண்டு. சூழலுக்கு ஏற்ற வகையில் ரூட்டு தலையையும் பாராட்டுவதும், எதிர் ரூட்டு தலைகளை வசைபாடியும் பாடல்களும் எழுவதும், பாடுவதும் வழக்கமாக இருக்கிறது. பேருந்துகளில் வரும் பிற கல்லூரி மாணவிகளை பற்றிய பாடல்களும் ரூட் தலைகளின் பிரதான அங்கம் வகிக்கிறது.
ஒவ்வொரு பேருந்து ரூட்டுக்கும் ஒவ்வொரு ரூட் தலைகள் உண்டு. சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி, நந்தனம் அரசுக் கல்லூரி என பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ரூட்டு தலைகளாக செயல்பட்டு வருகின்றனர். பஸ் டே கொண்டாடுவதிலும், அவர்களுக்குள் யார் பெரியவர்கள் என்பதிலும் தொடங்கும் மோதல் பின்னாளில் கொலை செய்யும் அளவிற்கான சூழலை ஏற்படுத்துகிறது.
கல்லூரி காலத்திலேயே கையில் கத்தியோடு சுற்றித் திரிவதற்கும், காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதற்கும் பின்னால் ரூட்டு தல பிரச்னை தான் முக்கியப் புள்ளியாக இருக்கிறது. கல்லூரிக் காலத்தில் தன்னுடன் 10 பேர் இருந்தால் நானும் ரவுடி தான் என்ற எண்ணம் தோன்றத்தான் செய்யும் எனவும், அதுவே பின்னாளில் தங்களின் வாழ்க்கையை சீரழித்துவிடும் என எச்சரிக்கின்றனர் முன்னாள் ரூட்டு தலைகள்
அடிக்கடி சண்டைக்கு செல்வதும், ஆயுதம் வைத்திருப்பதும் தான் கெத்து என்ற எண்ணம் தோன்றுவதற்கு திரைப்படங்கள் முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. திரைப்படங்களில் காண்பிக்கப்படும் ஹீரோயிசத்தை பின்பற்றும் ஒருசில கல்லூரி மாணவர்களால் மற்ற மாணவர்களுக்கும் பாதிக்கப்படுவதாக கல்வியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ரூட்டு தல என்பது கல்லூரி மாணவர்களுக்கான பிரச்னையாக இல்லாமல், பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களுக்கும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்துகிறது. ரூட்டு தல என்ற வார்த்தையை கேட்டாலே அருவருப்பாக இருக்கிறது எனும் சொல்லும் அளவிற்கான மோசமான சூழலை ஏற்படுத்தியுள்ளது இந்த ரூட்டு தல விவகாரம்.
ரூட்டு தல மாணவர்களின் பின்னணியை பார்க்கும் போது அவர்களில் பலர் முதல் தலைமுறை மாணவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் கடும் சிரமத்தின் மத்தியில் தங்களின் குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்புபவர்களாக உள்ளனர்.
தலைமைப் பண்பு பற்றி தெளிவில்லாத மாணவர்களுக்கு ரூட்டு தல விவகாரங்களில் பாதிக்கப்படவர்களின் நிலை என்பதை புரிய வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வாழ்வியல் மற்றும் தொழில் போன்ற கல்விகளை அதிகப்படுத்துவதும் ரூட்டு தல போன்ற அநாகரீகமான செயல்களில் இருந்து மாணவர்களை விடுவிக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள்.