ஆந்திராவில் அக்டோபர் 31ஆம் தேதி தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு முதல் ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஆந்திராவில் ஆண்டுதோறும் பெண்களுக்கு 3 இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். இந்த திட்டத்திற்கு தீபம் என பெயரிட்டார்.
இதுதொடர்பாக தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ‘தீபம்’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து சிவில் சப்ளை அமைச்சர் நாதெண்டலா மனோகர் உள்ளிட்டோருடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.
‘தீபம்’ திட்டத்தின் கீழ், தகுதியுடைய ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்டுக்கு மூன்று சமையல் காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும், சப்ளை தொடங்குவதற்கு முன்னதாக, அக்டோபர் 24 முதல் முன்பதிவு ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.
சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதால், அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த கூடுதல் சுமை ரூ.13,423 கோடியாக இருக்கும். சராசரியாக ஆண்டுக்கு ரூ.2,684 கோடி செலவாகும் என தெரிவித்துள்ளனர்.