சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் விரிசல் ஏற்பட்டதால் ஊழியர்கள் அனைவரும் கட்டடத்தை விட்டு வெளியேறினர்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல் தளத்தில் இன்றுகாலை விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அரசு ஊழியர்கள், உடனடியாக கட்டிடத்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள டைல்ஸ்களில் விரிசல் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் வேறு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் ஊழியர்களிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எ.வ.வேலு, டைல்ஸ்களில் ஏற்பட்ட விரிசலை பார்த்து ஊழியர்கள் அச்சமடைந்து வெளியேறியதாகவும், கட்டிடம் உறுதித்தன்மையுடன் இருப்பதால் ஊழியர்கள் அச்சம்கொள்ள தேவையில்லை எனவும் கூறினார்.