தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், மாநாட்டுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில், 85 ஏக்கர் பரப்பளவில் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 4-ம் தேதி தொடங்கியது.
மாநாட்டிற்காக 170 அடி நீளம், 60 அடி அகலம் மற்றும் 30 அடி உயரத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மாநாட்டின் பிரதான நுழைவு வாயில் செயின்ட் ஜாா்ஜ் கோட்டை போன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டின் தொடக்கமாக கட்சித் தலைவர் விஜய் கொடியேற்றுவதற்காக 100 அடி உயர கொடிக்கம்பமும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மேடையிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவிற்கு நடந்து சென்று விஜய் தொண்டர்களை சந்திப்பதற்காக, நடைமேடையும் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் பகுதியை கண்காணிக்க சுமாா் 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சுமாா் 350 நடமாடும் கழிப்பறைகளும் அமைக்கப்படவுள்ளன. மாநாட்டிற்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில். சுமார் 90 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.