திமுக அயலக அணி, தவறான இந்திய வரைபடத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சம்பவத்திற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்திய வரைபடத்தை தவறாக பதிவிட்ட திமுக அயலக அணிக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர், திமுக காலம் காலமாக பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும், திராவிட நாடு என்பதை வைத்து திமுக செய்யும் பிரிவினைவாத சூழ்ச்சி இனி எடுபடாது என்றும் கூறினார்.
நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா, உதயநிதி பொறுப்புக்கு வந்ததில் இருந்து திமுகவின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது எனவும், திமுக அயலக அணி தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்டது நாட்டிற்கு எதிரான செயல் என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், அயலக அணியின் செயல்பாடுகள் ஏற்புடையது அல்ல எனவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.