ஜனவரி ஒன்றாம் தேதி வரை டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்ததுடன், பட்டாசு கிடங்குகளுக்கும் சீல் வைக்க அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக, அங்கு பட்டாசு விற்பனைக்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனிடையே அந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக ஜனவரி ஒன்றாம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து டெல்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டெல்லி அரசின் உத்தரவுக்கு எதிராக பட்டாசு உரிமம் வைத்துள்ளவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், டெல்லி அரசின் உத்தரவை உறுதி செய்து ஆணையிட்டது.
மேலும், ஜனவரி ஒன்றாம் தேதி வரை பட்டாசு வைத்துள்ள அனைத்து கிடங்குகளையும் சீல் வைக்க வேண்டும் என்றும் டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.