தமிழ்தாய் வாழ்த்து அவமதிப்பு தொடர்பாக அமைச்சர் பதவியை உதயநிதி ராஜினாமா செய்வாரா என தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் தமிழ் தாய் வாழ்த்து முறையின்றி பாடப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ‘திராவிடம், திராவிடம்’ என்று சொல்லி திட்டமிட்ட ரீதியில் தமிழை அழிக்க துடிக்கும் திமுகவின் கனவு பலிக்காது.
‘என் இனிய தமிழ் மொழியை’ அதிகாரத்தை கொண்டு அழித்து விடலாம் என நினைத்தால் அதை எதிர் கொண்டு தமிழ் மொழியை காப்போம். ஆங்கில மோகத்தில் திளைத்திருக்கும் இவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தில் தமிழின் புகழை மறைக்க ‘புகழ்’ என்ற சொல்லை நீக்கி ‘திகழ்’ என்று பாட வைத்திருப்பதும், திராவிட நல் திருநாடும் என்பதில் ‘திருநாடும்’ என்ற சொல்லையும் நீக்க வைத்து தமிழ் தாய் வாழ்த்தை சிறுமைப்படுத்தி விட்டனர்.
இதன் மூலம் தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்து, அவதூறு செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.பாஜக வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தமிழ்த்தாய் வாழ்த்தை திமுகவால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.
தமிழ்நாட்டில் ஆங்கிலத்தை திணிக்க பல்வேறு வகைகளில் முயற்சி செய்கின்றனர் இவர்கள். நேரடியாக ஆங்கிலத்தை திணிக்க முடியாததால் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குகின்றனர்.( கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படி தான் உதயநிதி பொங்கியெழுந்து கூறினார்)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆளுநர் கலந்து கொண்ட விழாவில் தமிழ் தாய் வாழ்த்தில் ஒரு வரியை பாட மறந்த போது, அது ஆளுநரால் திட்டமிட்டு நடைபெற்றது என்று குற்றம் சாட்டியதோடு, அவரை நீக்க வேண்டும் என்றும் விலக வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கோரியிருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்ட விழாவில் இந்த அதிர்ச்சி தரும் வகையில் தமிழ் தாய் வாழ்த்தை சிறுமைப் படுத்தும் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
ஆளுநரை நீக்க வேண்டும் என்று சொன்னவர்கள், உதயநிதி ஸ்டாலின் தமிழுக்கு அவமரியாதை செய்து விட்டார் என்று விமர்சனம் செய்து அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க குரல் கொடுப்பார்களா? அல்லது தமிழை அவதூறு செய்ததற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.