நெல்லை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான டானா புயல் நேற்று அதிகாலை ஒடிசாவில் தீவிர புயலாக கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்த போது, அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த கீழடுக்கு சுழற்சியில் இருந்து மேற்கு காற்றை ஈர்த்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருந்தது.
இதன் தொடர்ச்சியாக தெற்கு கேரள கடற்கரையை ஓட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யுமெனவும் வானிலை மையம் கணித்துள்ளது.