மதுரையில் பெய்த கனமழை காரணமாக செல்லூர், தத்தனேரி, நரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் வரலாறு காணாத வகையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆலங்குளம் கண்மாய் நிரம்பி தண்ணீர் வெளியேறியதால் முல்லை நகர், செல்லூர், தத்தனேரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், அங்குள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மேலும், பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், கடந்த 25 நாட்களாக மதுரையில் கனமழை பெய்து வருவதாகவும், சராசரி அளவை விட அதிக மழைப்பொழிவு பதிவானதாலேயே குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ உதவிகள் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.