புதுச்சேரி கடற்கரை சாலையில் கூடுதல் போலீசாரை பணியில் ஈடுபடுத்த அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டார்.
புதுச்சேரியில் கடந்த இரண்டு தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும், கடல் வழக்கத்திற்கு மாறாக கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், கடலில் இறங்க வேண்டாமென சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், அதனையும் மீறியும் சிலர் கடலில் இறங்கி ஃபோட்டோ மற்றும் செல்பி எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடற்கரை சாலையை பார்வையிட்ட முதலமைச்சர் ரங்கசாமி, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடலில் இறங்காதவாறு தடுக்க கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டார்.