சென்னை காசிமேடு மீன் சந்தையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில், சில தினங்களுக்கு முன்பு சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஒரு செட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர். இதனிடையே, காசிமேடு மீன்பிடி சந்தையில் கெட்டுப்போன மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக தகவல் பரவியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி பேரணியாக சென்று சென்னையில் உள்ள மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மீனவ சங்கத் தலைவர் ராஜேந்திர பாபு, ஒரு சிலர் பரப்பிய தவறான தகவலால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரசாயனம் கலந்த மீன் விற்கப்படுவதாக வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், இதுதொடர்பாக சட்டமன்ற உறுப்பினரிடம் புகார் மனு அளித்ததாக கூறினார்.