புதுக்கோட்டை மாவட்டம் துளையானூரில் உள்ள குவாரியில் நடத்தப்பட்ட ஆய்வில், அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுத்தது தெரியவந்துள்ளது.
துளையானூரில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக புகாரளித்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி என்பவர், கடந்த 17-ம் தேதி கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக கல்குவாரி உரிமையாளர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் சம்பந்தப்பட்ட கல்குவாரியின் உரிமம் கடந்த 2023-ஆம் ஆண்டே முடிவடைந்ததும், 2 ஆண்டுகளாக உரிமமின்றி செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ட்ரோன் மூலமாகவும் கனிம வளக் கொள்ளை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது அரசு நிர்ணயித்த அளவைவிட 6 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு, அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதில் ஆயிரத்து 500 கியூபிக் மீட்டர் அளவில் வெட்டி எடுக்கப்பட்ட கற்கள், குவாரிக்குள் சேமித்து வைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பான அறிக்கை கனிமவளத்துறை இயக்குனரிடம் சமர்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.