ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்பவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற அன்புராஜை தடுத்து நிறுத்திய மர்ம கும்பல், அவரை ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அன்புராஜை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அன்புராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மருத்துவமனை முன், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் வேடுபறி நிகழ்ச்சியின்போது முறை வாங்குவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அன்புராஜ் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.