மெட்ரோ பணிகளை மேற்கொள்வதற்காக மாதவரம், எம்.எம்.காலனியை 4 மாதங்களுக்குள் காலி செய்து கொடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னைக்கு பால் விநியோகம் செய்யும் பொருட்டு மாதவரம் பால் பண்ணை அருகே, கடந்த 1959-ம் ஆண்டு மாட்டு கொட்டகை அமைக்க அரசு சார்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் அருகே மாடு வளர்ப்போர் தங்கி கொள்ள எம்.எம்.காலனி என்ற பெயரில் குடியிருப்பு பகுதி அமைக்கப்பட்டது.
அண்மையில் மெட்ரோ திட்ட பணிகளை மேற்கொள்வதற்காக எம்.எம்.காலனி குடியிருப்பு வாசிகளுக்கு, உரிய இழப்பீடுகளை வழங்கி நிலத்தை காலி செய்து கொடுக்க தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, நிலத்தை காலி செய்து கொடுக்குமாறு அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த லட்சுமி உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆவின் நிறுவனத்திற்கு மனுதாரர்கள் யாரும் பால் வழங்குவதில்லை என்றும், மனுதாரர்கள் ஏற்கனவே நிலத்திற்கான இழப்பீட்டை பெற்றுவிட்டதால் நிலத்திற்கு உரிமை கோர முடியாது என்றும் வாதிட்டார்.
வாதத்தை கேட்ட நீதிபதி பால் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் வெகுவாக வளர்ந்துவிட்டதாகவும், அதற்கான போக்குவரத்தும் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், நிலத்திற்கான இழப்பீட்டை பெற்றுக்கொண்ட பின் காலி செய்ய மறுப்பதை ஏற்க முடியாது எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து மே 31-ம் தேதிக்குள் குடியிருப்பு வாசிகள் அனைவரும் நிலத்தை காலி செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களை காலி செய்ய, அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என அனுமதியளித்து வழக்கை முடித்து வைத்தார்.