கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது போதுமான இடைவெளியுடன், உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என விதிமுறைகளை வகுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து மூன்று கண்டெய்னர் லாரிகளில் 117 மாடுகளும், இரண்டு கன்றுகளும் கேரளாவுக்கு அடிமாடுகளாக கொண்டு செல்லப்படுவதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்,
செங்கல்பட்டு மற்றும் அச்சரப்பாக்கம் போலீசார், லாரிகளை மடக்கிப் பிடித்து கால்நடைகளை மீட்டு திருவள்ளூரில் உள்ள கோசாலைகளில் ஒப்படைத்தனர்.
அந்த கால்நடைகள் ஆந்திராவில் இருந்து உரிய உரிமங்களுடன் கொண்டு வரப்பட்டது எனவும், அவை துன்புறுத்தப்படவில்லை என்றும் கூறி, அவற்றின் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், மனிதத்தன்மையற்ற முறையில் அவை கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், கால்நடைகளை இடமாற்றம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் நீதிபதி அறிவித்துள்ளார்.
அந்த வகையில் லாரிகளில் போதிய இடவசதியுடன் முறையான காற்று, உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்றும், கால்நடைகளின் உடல்நிலையை பரிசோதித்த பிறகே அவற்றை கொண்டு செல்ல வேண்டும் என்றும் நீதிபதி நிரமல்குமார் உத்தரவிட்டார்.
இதேபோல முறையான ஆவணங்களுடன் மட்டுமே கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.