போச்சம்பள்ளி, அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அரசு பள்ளியில் 13 வயது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது மிகவும் கண்டிக்கதக்கது என தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் மூன்று ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் எனறும், ஆனால் அவர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் வாசன் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இருக்கும் வகையில் தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும், ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்பிப்பதோடு பாதுகாப்பும் இருக்கும் வகையில் செயல்பட வேண்டுமே தவிர ஆசிரியர்களே வன்ம செயலில் ஈடுபட்டது ஆசிரியர் சமூகத்திற்கே மிகப் பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழக அரசு பள்ளி கல்லூரி உள்ளிட்ட மாநிலம் முழுவதும் மாணவிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென வாசன் வலியுறுத்தியுள்ளார்.