சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனனின் சந்தேக மரணம் குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1995ஆம் ஆண்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினரான அர்ஜூனன் காணாமல் போனார்.
அர்ஜூனன் இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்ததால் அவருக்கு எதிரான வழக்குகள் கைவிடப்பட்டன. தன்னுடைய தந்தையின் மரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி அர்ஜூனனின் மகன் சதிஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், அர்ஜூனன் இயற்கையாக மரணமடைந்தாரா அல்லது காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
மேலும், அரசு தரப்பில், 30 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜூனன் மரணம் குறித்து விசாரணை நடத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அரசின் தரப்பு வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி, 30 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜூனனின் மரணம் குறித்து விசாரிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.