திருப்பரங்குன்றம் மலையில் சம பந்தி கந்தூரி விழா நடத்தப்படும் என்ற செய்தி உண்மையல்ல என மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் விளக்கம் அளித்துள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயில் செல்லும் வழியில் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ அமைப்பினர் ஆடுகளுடன் செல்ல முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. மேலும், மலையை சுற்றி ஆய்வு மேற்கொண்ட ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி மற்றும் ஆதரவாளர்கள் அசைவ பிரியாணி சாப்பிட்டது பெரும் சர்ச்சையானது.
இதற்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சமூக நல்லிணக்கத்திற்காக வரும் 18ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலையில் சமபந்தி விருந்தாக ஆடு, கோழிகள் பலியிடுவோம் என மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பில் இந்த சமபந்தி நடைபெறும் என அந்த போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு பலியிடப்படும் என பரவும் செய்து உண்மையல்ல என விளக்கமளித்துள்ளது. மேலும், முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பெயரில் போலியாக இந்த செய்தி பரப்பப்படுவதாகவும், இதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அந்த அமைப்பு விளக்கமளித்துள்ளது.