முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் வாங்கப்பட்ட பஞ்சமி நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்யும்படி, தமிழ்நாடு மாநில பட்டியலினத்தவர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், ராஜாகளம் பகுதியில் உள்ள 40 செண்ட் பஞ்சமி நிலம், 1991ஆம் ஆண்டு பட்டியலினத்தை சேர்ந்த மூக்கன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது.
அந்த நிலத்தை பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்க முடியும் என்ற நிபந்தனையை மீறி, மூக்கன் நிலத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பெயரில் வாங்கியுள்ளார்.
இதையடுத்து, நிபந்தனையை மீறி நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மூக்கனின் மகன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாநில பட்டியலினத்தவர் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரை விசாரித்த ஆணையம், பஞ்சமி நிலத்தை பன்னீர்செல்வம் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கியதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அந்த நிலத்துக்கு அவர் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய உத்தரவிட்டது.
முறையற்ற வகையில், நிலத்தை மாற்றிக் கொடுத்த தாசில்தாரர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பஞ்சமி நிலங்களை மாற்றம் செய்வது தொடர்பான கோரிக்கைகளை ஏற்கக் கூடாது என சுற்றறிக்கைகள் பிறப்பிக்கும்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட பதிவாளர்களுக்கும், மாநில பட்டியலின ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.