இசையை தவிர்த்து தனக்கு வேறு எதுவும் தெரியாது என இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இளையராஜா இசையமைத்த தேவர் மகன் உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையை, தங்கள் அனுமதியின்றி யூ டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்த தடை விதிக்கக்கோரி கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மியூசிக் மாஸ்டர் இசை வெளியீட்டு நிறுவனம், வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்தபோது, 109 படங்களின் பாடல்களுக்கு ஆடியோ ரிலீஸ் ஒப்பந்தம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும், யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களை பற்றி குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி இளங்கோ முன், இசையமைப்பாளர் இளையராஜா ஆஜரானார்.
அவரிடம் குறுக்கு விசாரணை மேற்கொண்ட மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன், பாடல்களின் பதிப்புரிமை பற்றியும், தயாரிப்பாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பாவும், சொத்து மதிப்புகள் தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பினார்.
தனக்கு முழு ஈடுபாடும் இசையில் உள்ளதால், சொத்துக்கள் பற்றியோ மற்ற பொருட்கள் பற்றியோ தெரியாது எனக்கூறிய இளையராஜா.
பேர், புகழ் மற்றும் செல்வம் அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது என்றும் பதிலளித்தார். இளையராஜாவிடம் சாட்சி விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, மீண்டும் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி அனுப்பி உத்தரவிட்டார்.