நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று பழனி முருகனிடம் மனமுருகி வழிபட்டதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பழனி முருகன் கோயிலுக்கு வருகை தந்தார்.
ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்ற அவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பவன் கல்யாண் மற்றும் அவரது மகன் அகிரா நந்தன் ஆகியோர் உச்சிகால பூஜையில் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பவன் கல்யாண், தமிழ்நாட்டில் தான் மேற்கொண்டுள்ள ஆன்மிக பயணம் மிகவும் மனமகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக கூறினார். மீண்டும், பழனி – திருப்பதி இடையே பேருந்து சேவை தொடங்க ஆந்திர போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.