டெல்லியில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
டெல்லியில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிவாகி உள்ளதாகவும் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் டெல்லியின் சுற்றுப்புறங்களிலும் உணரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். இதேபோன்று, டெல்லி ரயில் நிலையத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பயணிகள் தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே, டெல்லி மக்கள் பதற்றத்தை தவிர்க்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், டெல்லியின் நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
டெல்லியை தொடர்ந்து பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வடமாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.