ராமேஸ்வரம் மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில் அவர்கள் அனைவரும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது 12 மீனவர்கள் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டினால் விடுதலை செய்யப்படுவதாகவும் தவறினால் 6 மாத கால சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், விசைப்படகு உரிமையாளர் ஒருவருக்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் அபராத தொகை மற்றும் 6 மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு மீனவருக்கு 18 மாத சிறை தண்டனை விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது மீனவ மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.