தாய்மொழி தமிழை அடிப்படையாக கொண்டு பல மொழிகள் கற்போம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் விதமாக, சர்வதேச தாய்மொழி தினம், பிப்ரவரி 21ம் தேதி அன்று கொண்டாடப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நமது எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம் என அவர் கூறியுள்ளார்.
உலக நாடுகள் கூட்டமைப்பான யுனெஸ்கோ, தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துவதாகவும், தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படியே, பாரதப் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வலியுறுத்துவதாகவும், இன்றைய டிஜிட்டல் உலகில், மொழிகளை இணைப்பதும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பை உருவாக்குவதும் இன்றியமையாதது எனவும் அவர் கூறியுள்ளார்.
நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம் என்றும், தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.