இருபது லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில், விசாரணை விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயபுரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரிடம் கடந்த ஆண்டு 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்ததாக காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி உதவி ஆய்வாளர்கள் ராஜாசிங் மற்றும் சன்னிலாய்டு ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர் எந்த புகாரும் அளிக்காத நிலையில், வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் இருவரும் இந்த வழக்கின் முக்கிய நபர்கள் என்பதால் இருவருக்கும் ஜாமின் வழங்கக்கூடாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, வழக்கின் விசாரணை விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 5ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.