தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் உண்டியலில் காந்தம் வைத்து நூதன முறையில் பணத்தை திருடி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சையில் பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில், 21 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 10ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 48 நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்று வரும் நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பணம், நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோயிலுக்கு வந்த இளைஞர் ஒருவர், உண்டியல் அருகே நின்று காந்தம் வைத்து நூதன முறையில் பணம், நகைகளை திருட முயன்றுள்ளார். இதனைக் கண்ட கோயில் ஊழியர்கள் இளைஞரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பியோடியுள்ளார்.
இது குறித்து கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், கபிஸ்தலம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.