தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத வழக்கில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் மற்றும் அவரின் மனைவி அபிராமி ஆகியோர் ஈசன் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ள நிலையில், இந்ந நிறுவனம் தரப்பில், ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
ஆனால், இந்த கடன் தொகையை திருப்பி தராததால் இருவர் மீது தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர் அவர், பெற்ற கடனை 30 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்றும், கடன் தொகை வசூலிக்க ஏதுவாக, படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.
ஆனால், கடன் தொகையைத் திருப்பி தராததை அடுத்து தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
மேலும், இந்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட சார் பதிவாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆணையிட்ட நீதிபதி , விசாரணையை மார்ச் 5 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.